திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.32 திருப்பயற்றூர் - திருநேரிசை
உரித்திட்டார் ஆனை யின்றோள்
    உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி
    விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது
    தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்
    திருப்பயற் றூர னாரே.
1
உவந்திட்டங் குமையோர் பாகம்
    வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்
    மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
    கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்
    திருப்பயற் றூர னாரே.
2
நங்களுக் கருள தென்று
    நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள்
    தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன
    நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்
    திருப்பயற் றூர னாரே.
3
பார்த்தனுக் கருளும் வைத்தார்
    பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
    சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்
    கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
    திருப்பயற் றூர னாரே.
4
மூவகை மூவர் போலும்
    முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும்
    நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்
    ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந்
    திருப்பயற் றூர னாரே.
5
ஞாயிறாய் நமனு மாகி
    வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்
    திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்
    பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்
    திருப்பயற் றூர னாரே.
6
ஆவியாய் அவியு மாகி
    அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்
    பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்
    கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்
    திருப்பயற் றூர னாரே.
7
தந்தையாய்த் தாயு மாகித்
    தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற
    ஏபல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்
    றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்
    திருப்பயற் றூர னாரே.
8
புலன்களைப் போக நீக்கிப்
    புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று
    இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார்
    மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்
    திருப்பயற் றூர னாரே.
9
மூர்த்திதன் மலையின் மீது
    போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்
    பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
    அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்
    திருப்பயற் றூர னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com